அக்டோபர் 24, 2013

வெள்ளாடுகள்




-துவாரகன்

இந்த ஆடுகளை என்னதான் செய்வதாம்
எப்படித்தான் சாய்த்துச் சென்றாலும்
வழிமாறிவிடுகின்றனவே?

ஆடுகளிலே ஆவலாதிப்படுவன
இந்த வெள்ளாடுகள்தானாம்!

அம்மம்மா சொல்லுவா…
‘சரியான பஞ்சப் பரதேசிகள்’ என்று
கண்டதெல்லாத்திலயும் வாய் வைக்குங்கள்
முருங்கையில ஒரு பாய்ச்சல்
பூவரசில ஒரு தாவல்
பூக்கண்டில ஒரு கடி
மேய்ச்சல் தரவையில சரியா மேயாதுகள்

இந்த ஆவலாதிப்படும் ஆடுகளை
என்னதான் செய்வதாம்?
சத்தம் போடாம
கட்டையில கட்டவேண்டியதுதான்.
10/2013